உலக நாயகன் கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் பிளாக் பஸ்டர் வெற்றி அடைந்ததை அடுத்து ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாகம் 1996ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. லஞ்சத்திற்கு எதிராக போராடும் அப்பா கமல் மற்றும் லஞ்சம் வாங்கும் மகன் கமல் என இரு வேடங்களில் கலக்கி இருந்தார் உலக நாயகன்.

இதைத் தொடந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 26 ஆண்டுகள் கழித்து தொடங்க உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் கிரேன் விபத்து ஏற்பட்டு 3 பேர் பரிதாபமாக இறந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு, தயாரிப்பு நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு காரணத்தால் படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.

அதன் பிறகு கமலஹாசன் விக்ரம் படத்தில் பிஸியாகி விட்டார். தற்போது மீண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தகவல்கள் வெளியானது. சிறுது நாட்களுக்கு முன்னர் இந்தியன்-2வில் காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்பட்டிருந்தது. அவருக்கு பதிலாக பாலிவுட்டில் பிரபல நடிகையான தீபிகா படுகோனே இல்லை எனில் கத்ரீனா கைப் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வரும் மாதம் செப்டம்பர் 13ஆம் தேதியன்று சூட்டிங் தொடங்க உள்ளதாக கூறி வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது நவரச நடிகன் கார்த்திக் இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
