நேற்று நாட்டின் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ்ப்படங்கள் சூரரைப்போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் போன்ற படங்கள் தேசிய விருதுகள் அள்ளின. குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா முரளி மற்றும் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ஜி.வி. பிரகாஷ் பெற்றார். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக் கதைக்கான விருதை சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் பெற்றிருந்தனர். மேலும் இன்று தனது பிறந்த நாளை சூர்யா கொண்டாட இருக்கும் நிலையில் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவிற்கு பிறந்தநாள் பரிசாக தேசிய விருது கிடைத்து உள்ளது என ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது வணக்கம் அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். ‘சூரரைப்போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லட்சுமி பிரியா சந்திரமவுலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். ‘நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்.

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும் நன்றியும். இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவர்க்கும் மீண்டும் நன்றி. என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
