மணிரத்னம் இயக்கிய ‘அலை பாயுதே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் மாதவன். முதல் படத்திலேயே அனைத்து இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியவர் நடிகர் மாதவன். அதற்கு பிறகு ‘மின்னலே’ , ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டாள்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். பிறகு ரசிகர்களால் செல்லமாக maddy என்று அழைக்கப்பட்ட மாதவனுக்கு அதற்கு பிறகு படங்கள் எடுபடவில்லை. ‘எவனோ ஒருவன்’, ‘ஆர்யா’ போன்ற படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன.

அதன் பிறகு அவர் நடித்த ‘யாவரும் நலம்’ திரைப்படம் பேசப்பட்டது. அதற்கு பிறகு ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். சுதா கொங்கரா இயங்கிய இப்படமானது பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பாக்ஸிங் கோச்சாக வரும் இவரின் attitude மற்றும் டயலாக்குகள் தெறிக்கும் படி இருந்தது. அதற்கு பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தில் போலீஸ் வேடத்தில் கலக்கி இருந்தார். பிறகு நடித்த ‘மாறா’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நடிகராக நடித்து வந்த அவரது பயணத்தை இயக்குனராக மாற்றியது ‘ராகெட்ரி : தி நம்பி எபெக்ட்’.

இஸ்ரோவில் வேலை செய்த விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் கதையை வைத்து உருவான திரைப்படம் தான் ராகெட்ரி : தி நம்பி எபெக்ட். ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், திரைத்துறை சார்ந்திராத பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா என அனைவரும் இப்படத்தை பாராட்டி இருந்தனர். இந்நிலையில் இன்று மாதவன் விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் உடன் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.